samedi 12 mai 2018

வெண்டாழிசை - 4


வெண்பா மேடை - 69
  
நிரையொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
விழியென மொழியினை விரிவுரை எழுதுவாய்!
பொழிலென மொழியினைப் புகழுவாய்! - அழிவிலா
அழகெனத் தமிழினை அணி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இன்னிசை வெண்டாழிசை
  
தமிழ்மொழி இனிதெனத் தரையெலாம் மொழிவதை
இமியுமே நினைத்திடா திருப்பவர் முகமதில்
உமிழ்வதும் உயர்வென உணர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீரான கருவிளம் மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நிரையொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் பெறும். வெண்பாவின் ஈறுபோல் மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் முடியும்..
  
மூன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
பண்பின் உயர்வை வலியுறுத்தி நிரையொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.05.2018

jeudi 10 mai 2018

வெண்டாழிசை - 3



வெண்பா
மேடை - 68
  
நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
குன்றின் வேலன் கோல யாப்பை
ஒன்றிக் கற்க ஊட்டி - நின்றான்
நன்றி சொன்னேன் நான்!
  
இன்னிசை வெண்டாழிசை
  
உள்ளம் தன்னில் உண்மை ஓங்க
வெள்ளம் போன்று மேவும் நன்மை!
பள்ளம் நீங்கும் பார்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீரான தேமா மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நேரொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் அடியாகும். வெண்பாவின் ஈறுபோல் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
  
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
அன்பின் அமுதை வலியுறுத்தி நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை, நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.05.2018

வெண்டாழிசை - 2



வெண்பா
மேடை - 67
  
ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
எங்கும் இன்றமிழ் இசைப்பீர்! இன்பம்
பொங்கும் பாக்களைப் புனைவீர்! - தங்கும்
மங்கலம் மணக்குமே மலர்ந்து!
  
முன்னைத் தோன்றிய முத்தமிழ் மொழியை!
உன்னைக் காத்திடும் ஒளியை! - என்றும்
அன்னை அன்பென அருந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இன்னிசை வெண்டாழிசை
  
பொங்கும் இனிமை பூத்துக் குலுங்கும்
எங்கள் தமிழாம் இணையிலா மொழியைச்
செங்கோல் செலுத்திடச் செய்
  
எண்ணும் எழுத்தும் இருவிழி என்றே
மண்ணில் எண்ணி மாண்பாய்க் கற்றோர்
உண்ணும் உணவே உணவு.
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீர்கள் [தேமா, புளிமா, கூவிளம் கருவிளம்] வந்து பயிலும் மூன்றடிப் பாடல். [ஆசிரியப்பாவில் வந்துறும் நேரொன்று ஆசிரியத் தளையும், நிரையொன்று ஆசிரியத் தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து இப்பாடல் அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் ஆகும். வெண்பாவின் ஈறுபோல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
  
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
ஒற்றுமையை வலியுறுத்தி ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.05.2018   

vendredi 4 mai 2018

வெண்டாழிசை - 1


வெண்பா மேடை - 66
  
வெண்டாழிசை
  
சிந்தியல் வெண்பாவின் இனமாக வெள்ளொத்தாழிசையும், வெண்டாழிசையும் அமைகின்றன.
  
மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருண்மேல் அடுக்கிவருதல் வெள்ளொத்தாழிசை. [தளை தட்டாமல் அமையும்]
  
வெண்டாழிசையும் சிந்தியல் வெண்பாபோல் வடிவத்தைப் பெற்றிருக்கும். முதல் இரண்டடிகள் நாற்சீராய் [அளவடியாய்], ஈற்றடி வெண்பாவைப்போல் முச்சீராய், நாள்,மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடியும்.
  
வேற்றுத்தளை பயின்று வரும் குறளைக் குறட்டாழிசை எனக் கொண்டதுபோல், வேற்றுத்தளை வந்துறும் சிந்தியல் வெண்பாவை வெண்டாழிசை எனக் கொண்டனர்.
இது ஒருபொருண்மேல் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ அல்லது மூன்றின் மிகுந்தோ வருதல் உண்டு. வெவ்வேறு பொருள் பற்றி அடுக்கியும் வருதல் உண்டு. மூன்றடிகளும் ஓரெதுகை பெற்றுவரும்.
  
1.வெண்டளையோடு வேற்றுத்தளை விரவி வந்த வெண்டாழிசை
2. ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
3. நேரொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
4. நிரையொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
5. கலித்தளையால் வந்த வெண்டாழிசை
6. வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை
7. ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை
8. ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை
  
எனப் பலவகையாக வெண்டாழிசை நுாற்களில் பயின்று வருவதைக் காணலாம்.
  
வெண்டாழிசைக்கும் வெள்ளொத்தாழிசைக்கும் இடையே உள்ள வேறுபாடு
  
வெண்டாழிசை சிந்தியல் வெண்பாப்போல் நாற்சீரடியிரண்டும் முச்சீராய் இறுதியடி ஒன்றும் பெற்று, பல தளைகளும் விரவித், தனித்தும், ஒரு பொருள்மேல் பலவாக அடிக்கியும் வரும்.
  
வெள்ளொத்தாழிசை தனித்து வாராது. சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்றாக அடுக்கி வருவதாகும். நாற்சீரடி இரண்டு முன்வர, முச்சீரடி ஈற்றடியாக வருதலொன்று தவிர பிறவெல்லாம் இவற்றிடையே வேறுபாடுகளாம்.
  
வெண்டாழிசை வெள்ளொத்தாழிசை என்ற இரண்டினையும் ஒன்றாகக் கொள்வர் காக்கைபாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவிநயனார் முதலானோர். [யா.க. 66 உரை]
  
வெண்டளையோடு வேற்றுத்தளை விரவி வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை!
  
கண்ணே! கவிக்காடே! கனித்தோப்பே! காதல்
பெண்ணே! பெரும்பேறே! பிணியகற்றும் - விண்ணமுதே!
மண்ணே மயங்கும்உன் வடிவு!
  

இன்னிசை வெண்டாழிசை!
  
விழியிரண்டும் வலைவீசும்! விந்தைச் சுவைகூட்டி
மொழிதிரண்டு கலைபேசும்! மோக மழைபொழியும்!
வழியிழந்து வாடும்என் வயது!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேலுள்ள வெண்டாழிசையில், வெண்டளையுடன், கலித்தளையும் [கவிக்காடே! கனித்தோப்பே] நேரொன்றிய ஆசிரியத் தளையும் [காதல் பெண்ணே] வந்துள்ளதைக் கண்டுணர்க.
  
இலக்கண விளக்கம்
  
இப்பாடல் மூன்றடிகளைப் பெறும். முதலிரண்ரடிகள் நாற்சீரடிகள். மூன்றாம் அடி முச்சீரடி. மூன்றடிகளும் ஓரெதுகை பெறும்.
  
வெண்டளை விரைவியும் வேற்றுத்தளை அருகியும் வரும்.
  
ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடியும்.
  
'தமிழினிமை' என்ற கருத்தமைய வெண்டளையோடு வேற்றுத்தளை கலந்து வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.05.2018

வெள்ளொத்தாழிசை


வெண்பா மேடை - 65
  
இன்னிசை வெள்ளொத்தாழிசை
  
சிந்தியல் வெண்பாவின் இனமாக வெள்ளொத்தாழிசை அமைகின்றது, மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள்மேல் அடுக்கிவருதல் வெள்ளொத்தாழிசை யாகும். இப்பாடல் இன்னிசையாலும் ஒரு விகற்பத்தாலும் பாடப்பட்டுள்ளது. இன்னிசையில்தான் இப்பாடல் சிறப்பாக அமையும். இசைப்பாடலின் எடுப்பு, தொடுப்பு ஆகிய அடிகளை மீண்டும் மீண்டும் பல முறை பாடுதல்போன்று, வெள்ளொத்தாழிசையிலும் முதல் சிந்தியல் வெண்பாவில் அமைந்த சொற்கள் அடுத்து வரும் இரண்டு சிந்தியல் வெண்பாக்களிலும் வந்து அமைந்தால் இசையோசை சிறக்கும். இப்பாடலை ஒரு விகற்பத்தில் பாடுதலே மரபாகும். ஒரு விகற்பமே ஓசை இனிமையும், புலமை வளமையும் ஊட்டும்.
  
அம்பேருண் கண்ணார் கழிந்த மடநெஞ்சே!
கொம்பே றுடையான் கழிலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே இறந்து விடல்.
  
வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே!
நீணாகம் பூண்டான் கழிலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே இறந்து விடல்.
  
கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே!
ஆளாக ஆண்டான் கழிலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா இருந்து விடல்.
  
[சிதம்பரச் செய்யுட் கோவை]
  
என இவை வெள்ளோசை கொண்டு வேற்றுத்தளை ஏற்காமல் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையால் வெள்ளொத்தாழிசை யாகும்.
  
தாய்மொழி
  
அன்பை அளித்திடுமே! பண்பைக் கொடுத்திடுமே!
இன்பை விளைத்திடுமே! ஈன்றவுன் தாய்மொழியே!
பொன்னை நிகரெனப் போற்று!
  
ஆக்கம் அளித்திடுமே! ஆற்றல் கொடுத்திடுமே!
ஊக்கம் விளைத்திடுமே! உன்னரும் தாய்மொழியே!
பூக்கும் வனமெனப் போற்று!
  
நன்மை அளித்திடுமே! நற்றேன் கொடுத்திடுமே!
வன்மை விளைத்திடுமே! வல்லவுன் தாய்மொழியே!
புன்மை அகற்றுமெனப் போற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மின்னும் விழியழகில் விந்தைக் கவிதைகளைப்
பின்னும் இளங்கொடியே! பித்தேறி வாடுகிறேன்!
மன்னும் கனவே மலர்ந்து!
  
மீட்டும் மொழியழகில் விந்தைக் கவிதைகளை
ஊட்டும் உயரழகே! பித்தேறி வாடுகிறேன்!
வாட்டும் கனவே மலர்ந்து!
  
வீசும் குளிர்காற்றாய் விந்தைக் கவிதைகளைப்
பேசும் கலைமகளே! பித்தேறி வாடுகிறேன்!
வாசக் கனவே மலர்ந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
நம் நாட்டின் இன்றைய நிலையை உரைக்கும் வண்ணம் இன்னிசை வெள்ளொத்தாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.05.2018

வெள்ளொத்தாழிசை 


வெண்பா மேடை - 64
  
வெள்ளொத்தாழிசை 
  
சிந்தியல் வெண்பாவின் இனமாக வெள்ளொத்தாழிசை அமைகின்றது, மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள்மேல் அடுக்கிவருதல் வெள்ளொத்தாழிசை யாகும். இப்பாடல் இன்னிசையாலும் ஒரு விகற்பத்தாலும் பாடப்பட்டுள்ளது. இன்று வெள்ளொத்தாழிசையைப் நேரிசையிலும் பாடலாம் என்றாலும் இன்னிசையில்தான் இப்பாடல் சிறப்பாக அமையும். இசைப்பாடல்களில் எடுப்பு, தொடுப்பு, ஆகிய அடிகளை மீண்டும் மீண்டும் பல முறை பாடுதல்போன்று, வெள்ளொத்தாழிசையிலும் முதல் சிந்தியல் வெண்பாவில் அமைந்த சொற்கள் அடுத்து வரும் இரண்டு சிந்தியல் வெண்பாக்களிலும் வந்து அமைந்தால் இசையோசை சிறக்கும். இரு விகற்பத்திலும் இப்பாடலைப் பாடலாம் என்றாலும் ஒரு விகற்பத்தில் அமைவதே ஓசை இனிமையும், புலமை வளமையும் ஊட்டும்.
  
1.
ஏரினைப் போற்றுதும்! ஏரினைப் போற்றுதும்!
பாருல கத்தோர் பசிப்பிணிக் கோர்மருந்தாய்
ஆருயி ரோம்புத லான்.
  
2.
கைத்தொழில் போற்றுதும்! கைத்தொழில் போற்றுதும்!
ஒத்துல கத்தே உயர்வாழ்வுக் கானபொருள்
அத்தனையுந் தான்தருத லான்.
  
3.
வாணிகம் போற்றுதும் வாணிகம் போற்றுதும்!
ஏணிபோல் எப்பொருளும் எங்கும்இல் லென்னாமே
ஆணிபோ லேதருத லான்.
  
புலவர் குழந்தை [தொடையதிகாரம் பக்கம் - 433]
  
ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, முதல் அடியிலும் ஈற்றடியிலும் சொற்கள் ஒன்றி வந்துள்ளன. [போற்றுதும்] [தருதலான்]
  
1.
அன்னாய் அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.
  
2.
ஏடி! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.
  
3.
பாவாய்! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
காவான் துறந்து விடல்
  
ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, மூன்று அடிகளிலும் பல சொற்கள் ஒன்றி வந்துள்ளன. [அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி] [நலங்கவர்ந்து] [துறந்து விடல்]
  
இலக்கண நுாற்பா
  
மூன்றாடியாய் வெள்ளை போன்று இறும்
[யாப்பருங்கலக்கரிகை - 27]
  
அடிஒரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய்
விடின்அது வெள்ளொத் தாழிசை யாகும்
[யாப்பருங்கல விருத்தி - 66]
  
அடிஒரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய்
விடின்அது வெள்ளொத் தாழிசை
[இலக்கண விளக்கம் - 731]
  
ஈரடி முக்கால் இசையினும் தளையினும்
வேறுபட் டியல்வான வெண்டா ழிசையே
[காக்கை பாடினியார்]
  
அடிமூன் றாகி வெண்பாப் போல்
இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை
[சிறுகாக்கை பாடினியார்]
  
அடிமூன்றாகி வெண்பாப் போல்
இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை
[அவிநயம்]
  
ஈரடி முக்கால் இசைகொள நடந்து
மூன்றுடன் அடுக்கித் தோன்றின்ஒத் தாழிசை
[மயேச்சுரம்]
  
முப்பாதம் தழுவிவெள்ளை
போன்றிறும் வெண்டாழிசை
[வீரசோழியம் - 121]
  
வெண்டா ழிசையெனில் வெண்சிந் தியல்போல்
அண்டாப் பிறதளை அணைந்து வருமே
[தொன்னுால் விளக்கம் - 243]
  
நேரிசை வெள்ளொத்தாழிசை
  
1.
என்னவளே!
  
பொன்னை நிகர்த்தவளே! பொங்குதமிழ் ஊட்டுகின்ற
அன்னை நிகர்த்தவளே! ஆரமுதே! - என்றென்றும்
உன்னைத் தொடரும் உயிர்!
  
தென்னை தரும்நீரே! தேனே! திருமகளே!
என்னை மயக்கும் இளங்கொடியே! - தென்னவளே!
உன்னைத் தொடரும் உயிர்!
  
முன்னைப் பயனென்பேன்! முற்றல் கனியென்பேன்!
மின்னை விளைக்கும் விழியென்பேன்! - அன்றிலென
உன்னைத் தொடரும் உயிர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, ஈற்றடி மூன்று பாடல்களிலும் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை]
  
2.
கடல்!
  
பற்றுடன் பாக்கள் படைக்கின்ற பாவலர்க்கு
நற்றுணை யாக நலங்கூட்டும்! - பொற்புடன்
கற்பனை ஊட்டும் கடல்!
  
மோதல் அலையாக மோக மனம்பாயும்!
ஊதல் இசையாக உள்ளினிக்கும்! - மாதவத்தால்
காதல் கமழும் கடல்!
  
மண்ணீர் உறைவீடு! மக்கள் மகிழ்வுறவே
விண்ணீர் உறும்பீடு! வேதனையால் - பெண்ணினத்தின்
கண்ணீர்த் தொகுப்போ கடல்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, பாடலின் ஈற்றுச் சீர் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை]
  
3.
என் தோழா!
  
பெற்ற விடுதலையால் உற்ற பயனென்ன?
முற்றித் துயரம்நம் மூச்சழுத்தும்! - நற்றோழா!
பற்றி எரிப்போம் பகை!
  
பற்றுடன் நன்குழைத்தும் பாரில் பயனென்ன?
பொற்புடன் வாழ்வு பொலியாதா? - நற்றோழா!
புற்றுறும் ஆட்சியைப் போக்கு!
  
கற்ற கலையினால் கண்ட பயனென்ன?
வற்றி வதங்கும் வகைமாற்ற - நற்றோழா!
வெற்றிப் பறைகளை மீட்டு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, முதலடியின் ஈற்றுச் சீரும் தனிச்சொல்லும் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை]
  
4.
திருமலையைச் சேர்வாய்!
  
திருமலைச் செல்வனைச் சேர்வாய் மனமே!
அருணிலை வாழ்வை அடைவாய்! - பெருமை
தருநிலை காண்பாய் தழைத்து!
  
விந்தை மிகுவெற்பை மேவு..என் உள்ளமே!
சிந்தை தெளிந்து சிறப்புறவே! - எந்நாளும்
தந்தை திருவடி தாங்கு!
  
வேங்கட வேந்தன் வினைதீர்ப்பான்! நெஞ்சமே
ஆங்கு..நீ சென்றே அமுதுண்பாய்! - தேங்குநலம்
ஓங்கிடும் என்றும் ஒளிர்ந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[சொற்கள் ஒன்றி வராமல் கருத்தால் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை] [சொற்களும் ஒன்றிடப் பாடுதலே சிறப்புடைய வெள்ளொத்தாழிசையாகும்]
  
தாய்மொழிக் கல்வியின் சிறப்பை உரைக்கின்ற வண்ணம் நேரிசை வெள்ளொத்தாழிசை பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.05.2018