samedi 24 décembre 2016

வெண்பா மேடை - 33

வெண்பா மேடை - 33
     
முற்று எதுகை வெண்பா!
    
சந்தமொலிர் செந்தமிழே! சிந்தையொளி தந்திடுவாய்!
பந்தமொளிர் கந்தமிட வந்திடுவாய்! - தந்ததன
மீட்டிடுவாய்! மாட்சியொளிர் சூட்டிடுவாய்! நாட்டமுடன்
தீட்டிடுவாய் ஆட்சியொளிர் பாட்டு!
    
நாற்சீரடியில் முதல் இரண்டு சீர்களில் எதுகை அமைந்திருப்பது இணையெதுகை
[கண்ணா! வண்ணா! காப்பாய் உலகை!]
    
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது பொழிப்பெதுகை
[கண்ணா! கமல வண்ணா! காப்பாய்!]
    
நாற்சீரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது ஒரூஉ எதுகை.
[கண்ணா! இந்தக் கவிஞனை எண்ணிடுவாய்!]
    
நாற்சீரடியில் முதல் மூன்று சீர்களில் எதுகை அமைந்திருப்பது கூழைஎதுகை.
[கண்ணா மண்ணை விண்ணைப் படைத்தாய்!]
    
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது மேற்கதுவாய் எதுகை.
[கண்ணா காப்பாய் மண்ணை விண்ணை!]
      
நாற்சீரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது கீழ்க்கதுவாய் எதுகை.
[கண்ணா! கண்கவர் கமல வண்ணா! ]
    
நாற்சீரடியில் நான்கு சீர்களிலும் எதுகை அமைதிருப்பது முற்று எதுகை.
[கண்ணா! மன்னா! தண்மலர் வண்ணா!]
    
முதல் மூன்றடிகள் முற்று எதுகை பெற்றும், ஈற்றடி கூழை எதுகை பெற்றும் இரு விகற்ப முற்று எதுகை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
   
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.12.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire