mercredi 16 mars 2016

வெண்பாக் கொத்து



திருக்குறளே இறைவன் ஒளி!
(வெண்பாக் கொத்து)

குறள் வெண்பா

அன்னைத் தமிழின் அருமைத் திருக்குறளே
உன்னை உயர்த்தும் ஒளி!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

அன்னைத் தமிழை அணியும் மனத்துக்குள்
முன்னைப் பெருமைகள் மூளும்! திருக்குறளே!
உண்மை உணர்த்தும் ஒளி!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

அன்னை அரசாள ஆன்ற அறமாளப்
பின்னைப் பழிபோகப் பேணுவாய்! - இன்குறளே!
உன்றன் உயிரின் ஒளி!

இன்னிசை வெண்பா

அன்னைத் தமிழே அகங்குளிரச் சீர்கொடுக்கும்!
முன்னை நிகர்த்தவளம் மேவ வழிபடைக்கும்!
வெள்ளமென இன்பம் விளைக்கும்! திருக்குறளே!
உள்ளமெனும் கோவில் ஒளி!

நேரிசை வெண்பா

அன்னைத் தமிழோங்க அன்பு நெறியோங்கப்
பொன்னை நிகர்த்த புகழோங்க - இன்னமுதாய்த்
தேங்கும் நலமோங்கத் தேனார் திருக்குறளே
ஓங்கும் உலகின் ஒளி!

இன்னிசைப் பஃறொடை வெண்பா

அன்னைத் தமிழே! அறத்தின் பிறப்பிடமே!
என்னை இயக்கும் இணையிலாப் பேரருளே!
தன்னே ரிலாது தழைக்கும் தவப்பொருளே!
பொன்னே! மணியே! புலமை மலர்க்காடே!
பாரோர் பயனுறப் பன்னல நூற்களைச்
சீரோ(டு) அளித்திட்ட செம்மொழிக் தேன்கடலே!
முப்பால் சுவையமுதே! மூவாத் திருக்குறளே!
ஒப்பில் இறையுன் ஒளி! 

நேரிசைப் பஃறொடை வெண்பா

அன்னைத் தமிழுற்ற தொன்மை உலகறிய
நன்றே உழைப்பது நம்கடனாம்! - இன்றுள்ள
துன்பம் அகலும்! துணிவு நிறைந்தோங்கும்!
இன்பம் பெருகும்! எழில்மேவும்! - மன்பதையில்
என்றும் பிறப்பொக்கும் என்றே நெறியூட்டும்
இன்றே இழிவுகளை இங்கெரிக்கும்! - நன்மையுறக்
கன்னல் சுரக்கும் கருணைத் திருக்குறளே
உன்னதம் ஊட்டும் ஒளி!

 இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசைப் பஃறொடை வெண்பா, நேரிசைப் பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும்.  ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்னை' என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'ஒளி' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன. 

16.03.2016

1 commentaire: